கடலென்றேன் உன்னை;
ஆழமறிய முடியாமல்!
காற்றென்றேன் உன்னை;
கடும் போக்கு உணராமல்!
வானென்றேன் உன்னை;
எண்ணம் போல்
வண்ணம் மாறும்
திரையென்று தெரியாமல்!
மானென்றேன் உன்னை;
மயக்கும் விழியை
மறக்க இயலாமல்!
நிலமகளென்றேன் உன்னை;
நிலைகொண்டுள்ள
பூகம்பம் உணராமல்!
மழையென்றேன் உன்னை;
விளையும் அனர்த்தம்
நினையாமல்!
தேனென்றேன் உன்னை;
எட்டாத தூரத்தை எண்ணாமல்!
மலரென்றேன் உன்னை;
மணம் தருவாயென்று!
மயிலென்றேன் உன்னை;
மனத்தோகை விரிப்பாயென்று!
நிலவென்றேன் உன்னை;
‘நீல் ஆம்ஸ்ரோங்
நீயில்லை’ என்றாயே!
காதலுக்கும் தினமுண்டு
கலந்து கொள்ளும்
மனமுண்டா என்றேன்;
மணம் கொள்ள
பணம் கேட்கும்
இதயமில்லா காதலுக்கு
எதற்கு நினைவுதினம் என்றாயே!