சூரியன்


 ‘தீபம்’ தீபாவளி இதழ் 1972.

 வெகு சாதாரண இயந்திர உபகரணங்களால் நெய்யப்பட்ட கம்பளிக் கோட்டும், கால் சராயும் அவை. இறந்த எவனிடமிருந்தோ பிடுங்கப்பட்ட குல்லாயும் ஸாக்ஸூம். அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். அம்மாவின் முகமும், அவன் பிடித்துக்கொண்டிருந்த கையும் தெரிந்தன அவனுக்கு.

பயிர்கள் எரிக்கப்பட்ட நிலத்தின் மேல், இருட்டில், துழாவிக்கொண்டு அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள்.

அவன் வாழ்ந்த ஐந்து நீண்ட வருஷங்களில் அவன் வெளியே வரும் முதல் தடவை அது.

காலில் தட்டுப்பட்ட நிலம் ரத்தமும் சதையும் கொண்ட ஒன்று போல் அவன் கையால் தைத்த பாதணிகளின் மேல் பட்டு ”நான் தான் மண். என்னை ஸ்பரிசித்துப்பார். நான் தான் மண்” என்றது.

அவன் அம்மாவின் கையை ஒரு நொடிக்கு உதறி மண்ணைத் தொட்டான்.

அம்மா குனிந்து அவனைப் பிடித்து நிறுத்தினாள்.

மங்கிய நிலவொளியில் கோடுகள் நிறைந்த முகம் அவன் முகத்தருகே வந்தது. கண் இமைகளில் சோகங்கள் கனத்தன இதழ்களின் சரிவில் கன்னங்களின் தொய்வில் ஆற்றாமைகள் கப்பிக்கொண்டடிருந்தன.

”நேரமில்லை பகனே. நமக்கு இதற்கு நேரமில்லை”

”ஒரே ஒரு தடவை அம்மா. அப்புறம் நான் எப்போ வெளியே வருவேனோ?”

”விடிந்துவிடும். வேகமாக போலாம் வா.” நரம்புகள் புடைத்த புறங்கையைப் பற்றிக்கொண்டான் அவன். அவர்கள் நடந்தார்கள்.

எரிக்கப்பட்ட நிலத்தின் முரட்டு ரோமம் இலைகள் செத்து, குச்சிக்கிளைகளை விரித்து நிற்கும் மரங்கள், சிறு ஓசை கேட்டாலும் அவர்கள் பதுங்கும் புதர்களின் முட்கள் எல்லாமே அவனுக்கு புதியவை.

பூமிக்கு அடியே உள்ள சிறு உலகில் வாழும் பல குடும்பங்களில் அவனுடையதும் ஒன்று. பூமிக்கு அடியேயே பள்ளி; அங்கேயே போருக்கான உதவிப் பொருட்கள் தயாரிப்பு; அங்கேயே சாவு; பிறப்பு; அன்பு; ஏமாற்றங்கள் எல்லாமும்.

சுற்றியுள்ள சுவர்களே அவன் உலகம். அம்மா சில சமயம் தாலாட்டு ஒன்று பாடுவாள்.

நீ இப்போது தூங்காவிட்டால்

விழித்ததும் தோட்டத்தில் ஓட விடுவேன்

பூக்களைப் பறிக்க விடுவேன்

நீ இப்போது தூங்காவிட்டால்…

அவன் தூங்கிவிடுவான். அம்மா தன் வார்தையை ஒரு நாளும் காப்பாற்றியதில்லை.

அம்மா எப்போதும் சொல்லும் ஒரு கதைக்கு அவனாகவே ஒரு சிறு தலைப்பு சூட்டியிருந்தான். ”நமக்கு நிலங்கள் இருந்தபோது.”

”மாடுகள் கத்தும் காலையில். மர பக்கெட்டில் பால் கரப்பேன். உன் அப்பா – அவர் ஆத்மா நிம்மதியடையட்டும் – மண்ணை முத்தமிட்டுவிட்டு வேலையைத் தொடங்குவார் காலையில். உன் அக்காவும், அண்ணாவும் – அண்ணா எனும் போது குரல் உடையும். அண்ணா வெளியே இருந்தான் – பள்ளிக்குப் போய் மத்தியானம் வரும்போது வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து சாப்பிடுவோம் எல்லோரும். உன் அப்பா – நெஞ்சைத் தொட்டுக்கொள்வாள் – பாடுவார் குரலெடுத்து. குரலில் சிரிப்பும் களிப்பும் ஆட.”

”எப்போம இதெல்லாம்?”

”நமக்கு நிலங்கள் இருந்தபோது.”

 அண்ணாவைப் புகை போல் அழுத்தமில்லாமல் நினைவிருந்தது. அண்ணா ஒரு முறை வந்திருந்தான். போர் வீரனுடையது போல் ஒரு உடை. ஒழுங்கான போர்வீரனின் உடை இல்லை அது. இறந்துபோன அமெரிக்க சிப்பாய்களிடமிருந்து உருவி எடுக்கப்படும் உடைகளைப் போல் பளபளக்கும் பித்தான்களோ, பட்டைகளோ, அணியைக் குறிக்கும் சின்னங்களோ அதில் இல்லை. அவன் கையில் துப்பாகி இருந்தது. அவன் முகத்தில் கோபமும், வீரமும் ஜொலித்தன. ஆகவே அவன் போர் வீரன்.  அவன் கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போலிருந்த போது அம்மாவும் அண்ணாவும் பேசிக்கொண்டார்கள்.

“முடியப் போகுறதா மகனே?”

”முடியும். முடியும்.” அண்ணா மெல்ல சப்தம் வர சிரித்தான்.

‘எப்போது முடியும் தெரியுமா? அமெரிக்காவிலிருந்து போரை நிறுத்த சில வருஷங்களுக்குப் பிறகு ஒரு நிபுணர் வருவார். விமானங்கள் பறந்துகொண்டிருக்கும் விர்விர்ரென்று. வேறு ஒரு சப்தமும் இருக்காது.  வெறும் பாழ் வெளியும் செத்த மரங்களும், எலும்புக்கூடுகளுமே. ‘இனி போரை நிருத்தலாம். இங்கே யாரும் இல்லைய என்று அவர் எழுதி அனுப்புவார். விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் இங்கே வருவார்கள். இங்கே ஒரு புது உலகம் உருவாகும். நூறு மாடிக் கட்டிடங்கள். இருநூறு மாடிக் கட்டிடம் ஒன்றைத் திறக்க பெரிய மனிதர் ஒருவர் வருவார். கட்டிடத்தைத் திறந்ததும் பெருத்த ஓசையுடன் என்ன வெளிப்படும் என்கிறாய்? ம்?”

அப்போதுதான் அவன் மெல்ல கண்ணைத் திறந்து பார்தான். அம்மா ஏறிட்டு அண்ணாவைப் பார்த்தாள்.

”எலும்புக் கூடுகள்! மண்டை ஓடுகள்! ஹாஹா!” அண்ணா சிரித்தான்.

அம்மா செவிகளைப் பொத்திக்கொண்டாள். அந்தக் கற்பனை அவளை வருத்தியிருக்க வேண்டும்.

 மீண்டும் அண்ணாவைப் பார்த்தபோது அண்ணா அழுதுகொண்டிருந்தான் ஓசையில்லாமல், கேவல் இல்லாமல். அண்ணாவின் முகம் நினைவில்லை. அந்த அழுகையும், விரக்தியும் மாத்திரம் தூங்கும்போது கனவில் ஒரு அங்கமாகவும் விழிக்கும்போது மனதில் ஒரு விம்மலாகவும் பதிந்துவிட்டது.

அம்மா அவனை துரிதப்படுத்தினாள்.

”விடிந்துவிடும். வேகமாக வா.”

வேகமாக நடக்கும்போதே அடர்ந்த புதர்களின் கீழும் இருண்ட பிரதேசங்களிலும் அவள் கண்கள் ஊடுருவின. அவள் அக்காவைத் தேடுகிறாள். அக்கா இரவுக்கு முன் முக்கிய காரியமாகப் போனாள். பின் வரவே இல்லை. வெகு நேரம் யோசித்துப் பின் அம்மா இவனுக்குக் கனத்த கம்பளி உடைகளை அணிவித்தாள்.

”அம்மா குளிர் இல்லையே அம்மா.”

”நாம் வெளியே போகிறோம் மகனே.”

”ஆம் – தோட்டங்கள் இருந்தால்.”

தனியாகப் போனால் ஆபத்து நேரிடலாம் என்றுதான் அவனையும் கூட்டிப் போவதாக அம்மா பின்பு சொன்னால். ஆபத்து என்ற வார்த்தைதான் அவன் முதலில் பேசக்கற்றான். எல்லா கேள்விகளுக்கும், பிடிவாதங்களுக்கும், அழுகையும், சிணுங்கல்களும் அந்த வார்தையில் அடங்கிப் பொடிந்துபோயின. ஆபத்து ரொம்ப அதிகமுள்ள வார்த்தை.

அவர்கள் ஒருமுறை மாறுவேஷம் போட்டுக் கொள்வது போல் விளையாடினார்கள்.

கைகளைச் சிறகுகளாய்ப் பிரிந்து ”நான்தான் தேவதை” என்றான் ஒருவன். உபயோகமற்றவன்.
சுடுவது போல் காட்டி, ”நான் வீரன்”, என்றான் ஒருவன். இவன் நிமர்ந்து நின்று நெஞ்சைத் தட்டி ‘நான் யார் தெரியுமா? நான்தான் ஆபத்து என்றான்.

நல்ல விளையாட்டு அது.

”கடவுளே, அவன் உயிரோடு இருக்கட்டும்,” அம்மா முணுமுணுத்தாள்.

அம்மா அடிக்கடி இந்த ஒரு நபரை அழைத்தாள். உதவி கோரினாள்.

”அம்மா, அந்த உலகில் ஷியரிங்-ஏய்ட் கிடையாதா?”

”அதிகப் பிரசங்கி. நரகத்துக்குப் போவாய்.”

அம்மாவின் நடை துரிதமானகியது. ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் அங்கும் இங்கும் நுழைந்து தேடினாள். புதர்கள் முகத்தைக் கீற அதனுள் தலையை ஙழைத்தாள். சில நமிஷங்களுக்குப் பிறகு பெரிய புதரொன்றின் அடியே நோக்கியவள் பின் நகராமல்,  கால் மடங்க அங்கேயே அமர்ந்தாள். அக்கா அங்கே படுத்துக் கொண்டிருந்தாள். அம்மாவின் அருகே கைக்கட்டி அவன் நின்றான். அம்மா சுருங்கிய விரல்களை அக்காவின் கேசத்தில் நுளைத்தாள். முகத்தின் மீது வருடினாள். நெஞ்சின் மீது தட்டினாள். விலகி இருந்ந உடைகளை இழுத்து மூடினாள்.

”என் சின்னப் பெண்ணே” என்றவாறு அவளை இழுத்து சேர்த்து மார்பில் சாய்த்துக்கொண்டாள்.
அவன் கைகட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். அவனுக்குப் புரியவில்லை வேறு என்ன செய்ய வேண்டும் என்று. அக்காவை அணைத்தவாறே வெகுநேரம் அம்மா அமர்ந்திருந்தாள். பின்பு நொடியில் எழுந்து நின்று ”போகலாம்” என்றாள். மீண்டும் நடக்கும்போது அம்மா பேசவில்லை. அவள் பிடி மாத்திரம் இறுகியிருந்தது. நடக்கும்போது அவனுக்கு பழக்கம் இல்லா ஒரு புது ஒளி மெல்ல பரவத் தொடங்கியது. அவன் கண்கள் கூசிக்கொண்டன. தூரத்தே ஒளி நூல்களால் தொங்கவிட்ட மஞ்சள் பந்து ஒன்று மிதந்து வந்தது.

அம்மாவின் கையை அசைத்தான்.

”என்ன மகனே?”
அவன் கையைப் பந்தின் பக்கம் சுட்டிக்காட்டித் தலையை உயர்த்தி அம்மாவைப் பார்த்து ”அது என்னது அம்மா?” என்றான்.
 சில வினாடிகள் அதைப் பார்த்தவாறே மெளனம் சாதித்த அம்மா, திடீரென்று தலையில் அமர்ந்து அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.

– முற்றும்.